Saturday, July 28, 2012

உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழா -படங்களின் தொகுப்பு


 30-வது லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் சனிக்கிழமை (28-7-2012) அதிகாலை 1.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் போட்டி நடைபெறக் கூடிய ஒலிம்பிக் பூங்கா பகுதி முழுவதும் விழாக்கோலம்
கண்டிருந்தது. லண்டன் நகரம் முழுவதும் கொடிகளும் பலூன்களுமாக காட்சியளித்தது.

ஒலிம்பிக் போட்டியைக் காண 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல், இங்கிலாந்து பிரதமர், ஐரோப்பா பிரமுகர்கள் உள்ளிட்டோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கிரேக்கத்தில் இருந்து தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் லண்டனை சுற்றி வந்த பின்னர், தேம்ஸ் நதி வழியாக போட்டி நடைபெறும் ஒலிம்பிக் பூங்கா மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி தொடங்கியது என்பதை அறிவிக்கும் பாரம்பரிய மணி முதலில் அடிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்களது நாட்டு தேசியக் கொடியை மிடுக்குடன் ஏந்தி வந்தனர். இந்தியாவின் மல்யுத்த வீரர் சுஷில் குமார் தேசியக் கொடியை ஏந்திச் சென்று, அணி வகுப்பிற்கு தலைமை தாங்கினார்.

ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைத்த உடனேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது.

தரையிலிருந்து விண்ணில் சென்று கலர் கலராக வெடித்துச் சிதறிய பட்டாசுகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. சுமார் 2 மணி நேரம் விண்ணில் வர்ண ஜாலம் நடைபெற்றது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக சீனாவின் லியாங் நகரில் இருந்து ரூ.1.75 கோடி செலவில் பட்டாசுகள் வரவழைக்கப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

இதில் தமிழகத்தின் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் ஆகியோரது இசையிலான பாடல்களும் அரங்கேற்றம் பெற்றன.ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் க்ரைக் ஹெலிகாப்டரில் இருந்து விளையாட்டு அரங்கில் குதித்த சாகச காட்சிகளும் இடம்பெற்றன.

பின்னர் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதாக இங்கிலந்து ராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார்.

பலத்த பாதுகாப்பு: போட்டிக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், லண்டனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான போலீஸôர் மைதானத்திலும், மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குவிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு ரசிகரும் கடும் சோதனைக்குப் பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மைதானத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணைகளை தயார் நிலையில் நிறுத்தி ராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வான்வழி, நீர்வழியாக தாக்குதல் நடத்தினால் அதைச் சமாளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

தேம்ஸ் நதியிலும் பாதுகாப்புக்காக கடற்படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்லாயிரக்கணக்கான போலீஸôரும், ராணுவ வீரர்களும் நகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



























No comments:

Post a Comment